கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர்களை தயாரித்து தரகோரி முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு அணுகியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது.
இதனையடுத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்பட பல நிறுவனங்களை அணுகி, வென்டிலேட்டர்களை தயாரித்து தரும் படி மத்திய அரசு கேட்டுள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியில் புதிதாக தொடங்கப்பட்ட வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்திடம் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை தயாரித்து தரும்படி கூறியது. அதேபோல தற்போது முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் வெண்டிலேட்டர்களை தயாரித்து தரும்படி மத்திய அரசு கோரியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பெங்களூருவைச் சேர்ந்த வெண்டிலேட்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். இதேபோல் டாட்டா மோட்டார்ஸ் குழுமமும் மைசூரை சேர்ந்த வென்டிலேட்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா கூறுகையில்:-
அரசாங்கம் மாருதி சுசுகி உட்பட பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் வெண்டிலட்டர் தயாரித்து தர கேட்டுள்ளது. எனினும் வாகன தயாரிப்பும் வென்டிலேட்டர் தயாரிப்பும் வேறு வேறானவை என்றும், ஓரிரு தினங்களில் அது சாத்தியமா என்பதை முடிவு செய்து அரசுக்கு தெரியபடுத்துவோம் என்றும் கூறினார்.