சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில், 225 பேர், கை, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற காரணம் குறித்து, அவர்களை கைது செய்த, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், விசாரணை நடந்து வருகிறது. கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைகளில் அடைக்கின்றனர். இவர்களை, போலீசார் பிடிக்க முயலும்போது, சிலர் தப்பிப்பர். அப்போது, கீழே விழுந்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவது உண்டு. சில சமயம், போலீசாரே, இவர்களின் கை, கால்களை முறித்து விடுவர் என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.
இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஒரே மாதிரியாக, கை, கால்கள் முறிந்து, சிறையில் உள்ளவர்கள்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என, 225 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த, 225 பேரை கைது செய்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், கை, கால் முறிவுக்கான காரணம் குறித்து, டி.எஸ்.பி.,க்கள் விசாரித்து வருகின்றனர்.