தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர் இழுப்பறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக மற்றும் தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதுவரை இரண்டு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இன்று இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.