சென்னை:-
இம்மாத இறுதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச், 24ல் முடிந்தது. அன்றைய தினம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும் 36,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும், பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 10ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்தது.
இதையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இன்று துவங்குகின்றன. இன்னும் ஒரு வாரத்தில், இப்பணிகள் முடிந்து, இம்மாத இறுதியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
ஒரு பாடத்திற்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மட்டும் முடிவை நிறுத்தி வைத்து, மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.