லண்டனில் நடைபெற்ற உலக அழகி 2019 போட்டியில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும், பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். மதிப்புமிக்க உலக அழகி பட்டத்தை ஜமைக்கா பல ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போது முதல்முறையாக வென்றுள்ளது. தீவு நாடான ஜமைக்காவின் லிசா ஹன்னா 1993 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார். இதையடுத்து உலக அழகியாக 23 வயதாகும் டோனி-ஆன் சிங் பட்டம் வென்றுள்ளார் .
23 வயதாகும் டோனி-ஆன் சிங், அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பு மற்றும் உளவியல் மாணவி என்று மிஸ் வேர்ல்ட் வலைத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் டோனி-ஆன் சிங் மருத்துவராக ஆசைப்படுகிறாராம். முன்னதாக பல்கலைக்கழகத்தில் கரீபியன் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி இருக்கிறார். இவர் தனது ஓய்வு நேரத்தில் பாடுவது, சமைப்பது, தன்னார்வத் தொண்டு செய்வது போன்றவற்றை விரும்புவாராம்.
தங்களது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம், என்று மிஸ் வேர்ல்ட் வலைத்தளம் கேட்டதற்கு, அவரது தாயார், அவர் தனது கனவுகளை முடிந்தவரை எல்லா வழிகளிலும் தொடர அனுமதித்தும் ஆதரவளித்தும் பெருமை சேர்த்தது தான் என கூறியிருக்கிறார். டோனி-ஆன் சிங் தான் உலக அழகி போட்டியை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.