கலையுலகின் பீஷ்மர், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 90வது பிறந்தநாள் இன்று.
பழைய ஒருங்கிணைந்த தஞ்சை கோவில் நன்னிலம் பகுதியில் 9/ஜூலை/1930 பிறந்தார் கைலாசம் பாலச்சந்தர் -சுருக்கமாக K.B. முத்துப்பேட்டையில் ஆசிரியராக தம் வாழ்க்கையை தொடங்கிய பாலச்சந்தர் அவர்கள் தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை விட்டு கலையுலகத்திற்கு வந்தவர். கலையுலகில் கால்பதித்தது மட்டுமல்ல. கலையுலகின் ஜாம்பவானாக வலம் வந்தவர். சினிமாவின் மூலம் சமூகத்தின் அவலங்களையும் தான் பார்க்க விரும்பிய சமூகத்தையும் கட்டமைத்தவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யாதவர் கே.பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமை உடையவர். இயக்குநர் பாலச்சந்தரால் கைகாட்டப்பட்ட அத்தனை நடிகர்களும் இன்று உச்ச நட்சத்திரங்கள்.
இன்று உலகமே எதிர்நோக்கும் வேலையில்லா திண்டாடத்தை ‘வறுமையின் நிறம் சிகப்பு’ மூலம் காட்டியவர். ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம் மூலம் தண்ணீர் பிரச்சினையையும் அதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் விளக்கியவர்.
குடும்ப உறவுகளையும், அதில் உள்ள சிக்கலையும் புதுப்புது அர்த்தங்கள் மூலம் காட்டியவர். காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் காதலர்கள் பற்றி ஏக் தூஜே கேளியே (Ek Thujae kiliyae) என்ற படம் மூலம் விளக்கியவர், அதேபோல் தற்கொலை ஒரு தீர்வல்ல என்று புன்னகை மன்னன் மூலம் காட்சிப்படுத்தினார்.
இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் இருந்தன.
உண்மை பெண்ணியத்தை திரையில் பிரதிபலித்தவர் கே.பி. இவர் காட்டிய அனைத்து பெண்களுமே சமூகத்தில் பொது புத்தியை நெற்றிப்பொட்டில் அடித்தவர்கள்.
பெண்ணியத்தை, பெண்கல்வி, சமூகத்தில் பெண்களின் நிலை, தன்னம்பிக்கை மனிதர்கள் என K.B காட்டியவை ஏராளம். K.B அன்றும், இன்றும், என்றும் வாழும் உன்னத கலைஞர்….