லண்டன்:-
கொரோனா நோய்த் தொற்று மற்றும் நோய் அச்சம் காரணமாக பொது சிறுநீர்க் கழிப்பிடங்கள் முற்றிலுமாகக் காணாமல்போய், வரலாற்றின் பக்கங்களில் மட்டுமே இடம்பெற்றுவிடக் கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனாவுக்குப் பிந்தைய உலகில் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான முன்னெடுப்பில் பொது சிறுநீர்க் கழிப்பிடங்களை அகற்றுவதும் முக்கியமான ஒன்றாகிவிடும் என்கிறார்கள் கழிப்பிடங்கள் தொடர்பான வல்லுநர்கள்.
இது தொடர்பாக பிரிட்டிஷ் கழிப்பிட அமைப்பின் (British Toilet Association) மேலாண் இயக்குநர் ரேமண்ட் மார்ட்டின் (Raymond Martin) கூறுகையில்:-
கொரோனா பரவல் மற்றும் பிந்தைய காலகட்டத்தில் எவ்வாறு பொது கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்து கொள்வது என்பது குறித்து அறிவுரைகள் கூறி வருகிறார்.
இனி கால்களில் இயக்கும் நீரடிப்பு வசதி (Foot Operating Flush), சென்சார் மூலம் இயங்கும் நீர் குழாய்கள், சோப் டிஸ்பென்சர்கள் போன்றவற்றைப் பொதுக் கழிப்பிடங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அவற்றை நோய்த் தொற்றில்லாதனவாக மாற்ற அரசுகளும் வணிக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
வரிசைகளிலான சிறுநீரகக் கழிப்பிடங்களை அமைப்பதற்குப் பதிலாகத் தனித்தனிச் சிற்றறைகளை அமைக்கலாம் என்று பிரிட்டனிலுள்ள ஹோட்டல் தொழில்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கன சதுரமான கழிவறைகளை அமைக்கலாம் என்று கூறி உள்ளார்.
ஒட்டுமொத்தமாகக் கழிப்பிடங்களை மாற்றியமைப்பது என்பது பெருஞ்செலவு பிடிக்கக் கூடிய ஒன்றாக இருந்தாலும் நாட்டில் இயல்பு நிலை திரும்புவதில் கழிப்பிடங்களுக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் ரேமண்ட் மார்ட்டின்.