வாஷிங்டன்:-
வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் ஆனது.
இதனிடையே, பாதுகாப்பு காரணமாக அதிபர் டிரம்ப் பதுங்கு குழிக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்க வைக்கப்பட்டு, பின்னர் மேலே அழைத்து வரப்பட்டுள்ளார் என தெரிகிறது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இந்த சமயத்தில், மெலனியா டிரம்ப் மற்றும் மகன் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd) என்பவர் போலீஸ் அதிகாரியால் கழுத்து நெரித்து கொலைசெய்யபட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தேசிய காவல்படையினர் கொலராடோ Colorado, ஜார்ஜியா Georgia, கென்டகி Kentucky,மின்னசோட்டா Minnesota, ஒஹியோ Ohio, டெண்ணேஸ்ஸி Tennessee, டெக்சாஸ் Texas,வாஷிங்டன் Washington, விஸ்கான்சின் Wisconsin, உடா Utah, வடக்கு டகோட்டா North Dakota, கலிஃபோர்னியா California, மிஸ்ஸவ்ரி Missouri, விர்ஜீனியா Virginia, கன்சாஸ் Kansas, இல்லினாய்ஸ் Illinois மற்றும் நெவாடா Nevada ஆகிய 17 மாகாணங்களிலும், வாஷிங்டன் DC-லும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும், அதிகளவு பாதுகாப்பு படையினரையும் பணியில் ஈடுபடுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
9/11 தாக்குதலுக்கு பிறகு தற்போதுதான் இந்த அவசர பாதுகாப்பு பதுங்குகுழி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.