சென்னை:-
வைகைப்புயல் வடிவேலுவும், நடிகர் சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். நில மோசடி தொடர்பாக நீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது யு-டியூப் சேனலில் சிங்கமுத்துவை பேட்டி கண்டார்.
இதில் வடிவேலு பற்றிய சிங்கமுத்து அவதூறு பேசியதாக தெரிகிறது. இதனால் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சங்கம் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.
அதில் வடிவேலு கூறியிருப்பதாவது:-
நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூ-டியூப் சேனலில் என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் மனோபாலா கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை பல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.