ஊட்டி:-
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நண்பர் போஜா கவுடர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர் (90). இவருக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.
உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 2006ல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
போஜா கவுடர் தனது மற்றொரு நண்பர் சம்பத் குமார் என்பவரும் சேர்ந்து, பெண் குழந்தைகள் கல்விக்காக, ‘சேவ் அவர் டாட்டர்ஸ்’ (Save Our Daughters) என்ற அமைப்பை துவக்கினர். இவர்களது சேவ் அவர் டாட்டர்ஸ் தொண்டு நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, இருந்த போஜா கவுடர் 50 மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வந்தார்.
இவரது மறைவு குறித்து கடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா கூறுகையில்:-
ஏழை எளிய மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வந்த போஜா கவுடரது மறைவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.