இன்று ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்.
அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் புலிகள் தான்.
பின்னனி:-
கடந்த 2010 ம் ஆண்டு ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் (Saint Petersburg) நடைபெற்ற புலிகள் உச்சி மாநாட்டில் (Tiger Summit) புலிகளை பாதுகாக்கும் நோக்கிலும், புலிகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வருடம் தோறும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அது முதல் ஜூலை 29 ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 வகையான புலிகள் இருந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, 2010 செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாட்டில் 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உணவுச் சங்கிலியை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்:-
கம்பீரமும், பேராற்றலும், பேரழகும் கொண்ட உயிரினங்களில் முதலிடத்தில் உள்ளவை புலிகள் இனம். ஒருகாலத்தில் புலி வேட்டையாடுவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டது. சுற்றுச்சூழல் மண்டலத்தில் உணவு சங்கிலியை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கை வகிக்கும் உயிரினங்கள் என்றால் புலி ஆகும்.
புலி வேட்டை:-
100 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வெறும் 3,800 புலிகள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால், புலிகள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டன. 1875-ம் ஆண்டு முதல் 1925-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 65 ஆயிரம் சிறுத்தைகள் இந்தியாவில் கொல்லப்பட்டன.
புலிகள் எண்ணிக்கை இந்திய வனப்பகுதிகளில் குறைந்ததால் 1930-ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பாதுகாக்கபட்ட வனப் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, புலிகள் வேட்டை தடை செய்யப்பட்டது.
1878-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் புலிகள் அதிகளவில் இருந்ததை ஆங்கிலேயர்கள் பதிவிட்டுள்ளனர். 1830-ம் ஆண்டில், சேலத்தை அடுத்துள்ள ஏற்காட்டில் சில நாட்கள் தங்கியிருந்த மேஜர் ஹென்றி பெவன் என்ற ஆங்கிலேயர், சேர்வராயன் மலைக் காடுகளில் யானைகள், புலி, சிறுத்தை, சிவிங்கப் புலி போன்ற விலங்குகள் அதிக அளவில் இருந்ததாகக் தான் எழுதிய ‘இந்தியாவில் 30 ஆண்டுகள்’ (1808-1838) எனும் நூலில் குறிப்பிட்டார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் புலிகள் இருந்தன. ஆனால், வேட்டை, காடுகள் அழிப்பு, உணவுப் பற்றாக்குறை, வாழ்விடம் சுருங்கியது, முதலிய காரணங்களால் தொடர்ந்து இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கைக் குறையத் தொடங்கியது. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புலிகளின் எண்ணிக்கை, ஆயிரங்களை நோக்கி அழிவுப் பாதையில் சென்றது. 1972-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் 1,872 புலிகள் தான் இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் புலிகளைப் பாதுகாப்பதற்காகப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
1973-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்படி, புலிகள் வாழும் பகுதிகளைப் புலிகள் காப்பகமாக அறிவித்து நிதி ஒதுக்கி, அப்பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது, புலி வேட்டையினைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசின் நடவடிக்கைகளால் 2010 ம் ஆண்டு இந்தியாவில் 1706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014 ம் ஆண்டு கணக்கெடுப்பில் 2226 ஆக உயர்ந்துள்ளது. உலகின் 70 சதவீத புலிகள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதிலும் புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைகள்.
மனிதர்களுக்கான வளர்ச்சி என்ற பெயரில் புலிகளின் வாழ்விடத்தைச் சுருக்கக் கூடாது என்றும், வனத்திற்குள் தேவையான தண்ணீர், இரை போன்றவை இருந்தால் புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் நின்று விடும் என்கின்றனர் வனஉயிரின ஆராய்ச்சியாளர்கள்.
காலநிலை மாற்றங்களை சீராக்கும் புலிகள்:-
பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குவதற்கு புலிகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.
பரந்து விரிந்தக் காடுகள், காலநிலை மாற்றங்கள் சீராக இருக்க உதவுகின்றன. சரியான காலநிலை மனிதர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிறது. பொதுவாக புலிகள் ‘கொடிக்கப்பல் உயிரினம்’ என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த கடலில் வரும் போது அந்த கப்பல் குறித்து அறிந்து கொள்ள அதன் மீது பறக்கும் கொடியே முதல் ஆதாரமாக உள்ளது.
அது போல் ஒரு வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் குறித்து எடுத்துரைக்கும்.
மனித இனத்தின் அவசியத் தேவையான நீர், தூய்மையான காற்று இவை இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் செழிக்க புலிகள் வேண்டும். அதனால், புலிகளை பாதுகாக்கும் வகையில் சர்வதேச புலிகள் தினத்தை கொண்டாட வேண்டியது அவசியம்.
இன்றும் புலிகளை அவற்றின் தோல், நகம், பல் என பலவற்றிற்காக வேட்டையாடும் பல கும்பல்கள் உள்ளன. இவர்களிடமிருந்து இந்த மிருகங்களைக் காக்க பொது மக்களாகிய நாமும் ஒன்றுபட வேண்டும்.
நம் நாட்டை பொறுத்த வரை, புலி நம் நாட்டின் பெருமை. புலி தான் நம்முடைய தேசிய விலங்கு (National Animal). நமது புலிகள் அவற்றின் கம்பீரம் மற்றும் தோற்றத்திற்காக உலகெங்கிலும் புகழ் பெற்றவை. நம் தேசிய விலங்கான புலிகளைக் காப்போம். அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவோம்!!