சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக தனியார் கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இந்த மையங்களில் 16 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. லேசான அறிகுறி மற்றும் தீவிர சிகிச்சை தேவையில்லாத கொரோனா நோயாளிகள் 2 வாரம் வரை இந்த மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு 3 வேளையும் உணவு, மருந்துகள் மற்றும் போர்வை, குளியல் சோப்பு, பக்கெட், பற்பசை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. இதற்காக மிகப்பெரிய தொகையை மாநகராட்சி செலவிட்டு வருகிறது. சராசரியாக தினசரி ஒவ்வொருவருக்கும் ரூ. 500 செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இப்போது அந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுவிட்டன. அங்கு போடப்பட்டிருந்த படுக்கைகள் ஜெ.ஜெ.நகர் உள் விளையாட்டு அரங்கத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.நடமாடும் கழிவறைகளும் அகற்றப்பட்டுவிட்டன.
சிகிச்சை மையங்கள் செயல்பட்ட அனைத்து கல்லூரிகளையும், கல்லூரி உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். ஒப்படைப்பதற்கு முன்பு கல்லூரிகள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.