வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 56வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நேற்று முன்தினம் 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைக்க தயார் என கூறியிருந்தது. அதனை கேட்டுக்கொண்ட விவசாயிகள் இது குறித்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது குறித்து பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் என்ற விவசாய குழு, “எங்கள் மீது வலையை வீசுவது, இனிப்புகளுக்குள் விஷத்தை மறைப்பதே அரசின் யுக்தி. போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். எங்கள் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்” என கூறியுள்ளது.