கேரளா :
கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதித்த 2 இளம்பெண்களை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு இளம்பெண்ணை மருத்துவமனையில் வைத்து ஊழியர் பலாத்காரம் செய்ய முயற்சித்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே கொரோனாவிலிருந்து மீண்ட ஒரு இளம்பெண்ணுக்கு நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு சுகாதார ஆய்வாளர் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்த மேலும் ஒரு இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் ஊழியரின் பலாத்கார திட்டம் வெற்றி பெறவில்லை. கோழிக்கோடு அருகே உள்ள உள்யேரி என்ற இடத்தில் மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு 33 வயதான இளம்பெண் கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது பெற்றோருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த இளம்பெண்ணின் தந்தை முதல் மாடியிலும், அவரும், அவரது தாயும் மூன்றாவது மாடியில் உள்ள வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கவச உடை அணிந்து வந்த ஒரு மருத்துவமனை ஊழியர் அந்த இளம்பெண்ணிடம் டாக்டர் அழைப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண் அந்த ஊழியருடன் சென்றுள்ளார். 4வது மாடிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், இளம்பெண்ணை ஆளில்லாத இடத்தில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் அவர் புகார் செய்தார்.
ஆனால் புகார் தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் போலீசுக்கு போன் செய்து புகார் கூறினார். நள்ளிரவாகி விட்டதால் காலையில் வந்து புகார் குறித்து விசாரணை செய்வதாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இரையாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.