டெல்லி:
இந்திய கடற்படையின் மிக் -29கே பயிற்சி விமானம் வியாழக்கிழமையன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்டார்,மற்றொருவரின் நிலை குறித்து தெரியவில்லை.
இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ரமாதித்யாவிலிருந்து மிக் – 29கே பயிற்சி விமானம் புறப்பட்டுள்ளது.இரு விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.சில நிமிடங்களில் இவ்விமானம் அரபிக் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.வியாழன் அன்று மாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக கடற்படை இன்று உறுதி செய்துள்ளது.
ஒரு விமானி மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டார். மற்றொரு விமானியை தேடும் பணி வான் வழியிலும், தரை வழியிலும் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ரஷ்ய தயாரிப்பான மிக் – 29கே தற்போது INS விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்படுகிறது. இதனை உள்நாட்டிலேயே தயாரித்த விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்திலும் நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் வடக்கு அரபிக் கடலில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் இணைந்து இந்தியா நடத்திய மலபார் கடற்படை பயிற்சியில் இவ்விமானம் பங்கேற்றது. இந்த நிலையில் நேற்று விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.