பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் s.s.ராஜமௌலி இயக்கி வரும் படம் “RRR” என்று அழைக்கப்படும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘RRR’ படம் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை, பிரபல நிறுவனமான ‘லைகா’ கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.