நடிகர் விஷால் அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா, மனோ பாலா. சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். பாலசுரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதனையடுத்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி சக்ரா படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு சக்ரா படம் பிப்ரவரி 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு கூறியிருந்தது.
ஆனால் பிரபல தயாரிப்பு நிறுவனம் ‘ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’, சக்ரா வெளியீட்டிற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து அந்நிறுவனம் அளித்த புகார் மனுவில், ‘தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்த கதையை இயக்குநர் ஆனந்தன், விஷாலை வைத்துப் படமாக்கியுள்ளார். இது காப்புரிமைச் சட்டத்திற்கு விரோதமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்கக்கோரி இயக்குநர் ஆனந்தன் மற்றும் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ‘சக்ரா’ படத்தை வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதாக விஷால் தரப்பு கூறியதால், சக்ரா படத்திற்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சக்ரா படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது. இந்தச் செய்தியறிந்து உற்சாகமான விஷால் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.