தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர், சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாத்து, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், ஆனால் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து வருவதாகவும் அவர் சாடினார்.
இதைத் தொடர்ந்து, களக்காட்டில் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அதிமுக தான் என அவர் குறிப்பிட்டார். மக்களின் பிரச்னைகளையே அறியாதவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதலமைச்சர் சாடினார். 5 முறை ஆட்சியில் இருந்தபோதும் மக்களுக்கு எதுவும் செய்யாத திமுக, இனிமேல் என்ன செய்யப் போகிறது என்றும், மு.க.ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.