சென்னை:-
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி,ஆன்லைன் விளையாட்டில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்,
ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்,குறிப்பாக தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.எனவே,பொதுநலன் கருதி இந்த சட்டம் இயற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஆக. 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில்,, ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனக்கூறி, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.