சென்னை:
நம்ம சென்னைக்கு வயசு 382 ங்க. நிசமாத்தாங்க ….
சென்னை 382 ஆண்டுகளுக்கு முன்பு கிராமம் தான். ஆனால், கிழக்கு இந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது முதல் பல முன்னேற்றங்கள் இங்கு ஏற்பட்டன. எனவேதான் அது பெரிய நகரமாக உருவெடுத்தது. சென்னைக்கு பல பழம் பெருமைகள் உண்டு.
1688ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதராஸ் நகரை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதாவது நாட்டின் முதல் நகராட்சியே சென்னைதான். சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22ம் தேதி 382வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாக கருதி, இதையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள்.
சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004 ஆண்டு முதல் மெட்ராஸ்டே கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.
1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இப்போது சென்னையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளதல்லவா அந்த இடத்தை வாங்கினார்கள். இந்த இடத்தை விற்றது அய்யப்பன் நாயக்கர் மற்றும் வேங்கடப்பன் ஆகியோர். அவர்களது தந்தைதான் சென்னப்ப நாயக்கர். கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், போர்த்துகீசியர்கள், 1522ல் சாந்தோம் பகுதியில் துறைமுகத்தை நிறுவி ‘மெட்ராஸ்’ என்று அழைத்தனர். அதாவது மெட்ராஸ் என்ற பெயர் 16வது நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது.
தற்போது, சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் அறிவிக்கப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் மாகாணம் வேண்டாம் என்று, 1969ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது.
அப்போது முதல், மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் மக்களால் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது. அதிலும் மெட்ராஸ் என்பதுதான் சாமானியர்களுக்கும் பழக்கப்பட்ட பெயராக விளங்கியது.
1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. அன்று முதல் மெட்ராஸ் என்ற சொல்லாடல் குறைந்து கொண்டே வந்து இப்போது ஏறக்குறைய மறக்கப்பட்ட பெயராகிவிட்டது.
ஆனால், பழம் பெருமை கொண்ட நகரை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, மெட்ராஸ் டே என்ற தினம் கொண்டாடப்படுகிறது.
இன்னைக்கி சென்னை மாநகரம் எம்புட்டு பெருசா வளந்துருக்கு ….. பாத்தீங்கள்ல …..
வந்தாரை வாழவைக்கும் சென்னையா மாறியிருக்குல்ல …..
இப்பேற்பட்ட பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகள் கொண்ட நம்ம சென்னையில நாம வாழுறதே சந்தோசம் தான ……
வாங்க நாமளும் சென்னை தினம் கொண்டாட போகலாம் ….