தமிழகத்தில் இன்று 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் நிர்ணயிக்கப்பட்ட 20 இலட்சம் என்ற இலங்கைத் தாண்டி தடுப்பூசி செலுத்திச் சாதனை படைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில், தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தி, முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தின் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், போன்ற இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்காக வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித்தறை, ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது.
உள்ளாட்சித்துறை சார்பாக 100சதவீத தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளுக்கு விருதும், பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பரிசுப்பொருட்களை அறிவித்து அதிக அளவில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தினர். சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இயல்பை விட மெகா தடுப்பூசி முகாமில் 3 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மெகா தடுப்பூசி முகாமானது, கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ள மையங்களில் இரவு 8.30 மணி வரை நீட்டித்து தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4.01 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. சா.கற்பகவிக்னேஷ்வரன்