சென்னை
இந்திய அஞ்சல் துறை ஆண் குழந்தைகளுக்காக புதிய சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கு பொன் மகள் சேமிப்பு திட்டம் இருப்பதை போன்று, ஆண் குழந்தைகளுக்காக இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும்.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1 சதவிகித வட்டியும், லாபமும் கிடைக்கிறது. ஆண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது. தங்களது மகனுக்கு கணக்கு தொடங்க விரும்பும் பெற்றோர் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம்.
புதிதாக தொடங்கப்பட்டஅஞ்சல் துறை சேமிப்புக் கணக்கை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு(Joint account)தொடங்க வேண்டும்.
பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,பெற்றோரின் முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
இத்திட்டத்துக்கான வட்டி 8.1 சதவிகிதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்று கூறப்படுகிறது. எனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து தபால் நிலையத்தில் அல்லது இந்திய அஞ்சல் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கணக்கு தொடங்கியதிலிருந்து 7-ஆவது ஆண்டில் 50 சதவிகிதத் தொகையை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்த வேண்டியதில்லை.
செலுத்திய பணத்தை முன்கூட்டியே எடுக்க விரும்பினால், முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதற்கு பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80சி பிரிவில் வருமான வரி விலக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.