இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
அந்தவகையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்துவரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் மற்றும் உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில் தமிழக முதல்வரும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை அளிக்கப்படும் என்றும், இந்த ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பி.எம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு 23 வயது பூர்த்தியான பிறகு இந்த 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.