நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் என 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு வகையான ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு, தங்களின் அறிக்கையை ஜூலை 14ம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையலே தமிழக சட்டப்பேரவையில் நீட்விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், “நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். தனிச் சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை +2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும். 2007-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல, நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.
நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள சுகாதார அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு விடும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்குமுந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்புத் தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.
இந்தியாவில் எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானது இல்லை. நீட் தேர்வு கற்றலை பிரபலப்படுத்தாமல் பயிற்சி நிறுவனங்களைத்தான் பிரபலப்படுத்துகிறது. நீட் தேர்வு அமலான பிறகு எம்.பி.பி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை விகிதம் தலைகீழாக மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு பிந்தைய காலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம், தனியார் கல்விக்கூடங்கள், மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆய்வுத் தரவுகள் இடம்பெற்றுள்ளன. சா.கற்பகவிக்னேஷ்வரன்