பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக நியமித்தது. இதனையடுத்து சரண்ஜித் சிங் சன்னி இரண்டு துணை முதல்வர்களோடு பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பஞ்சாபின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. திடீர் திருப்பமாக, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாமல் கட்சித்தலைமை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.
இந்தநிலையில் அமரீந்தர் சிங் சந்திப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பாஜகவில் சேரப்போவதாகவும் கூறப்படும் ஊகங்களுக்கு இந்த சந்திப்பு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்