கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பெயர் விவரங்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2007-ம் ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் 2 எழுத்தாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்து வருகிறது.
கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுபோன 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் சேர்த்து நடைபெறும்.
விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.திவ்யதர்ஷினி