சென்னை:-
நடிகர் ரஜினிகாந்துக்கு இன்பார்க்ட் ரத்த நாள பாதிப்புக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக டெல்லி சென்று திரும்பினார் ரஜினிகாந்த். அங்கே ஜனாதிபதி, பிரதமர் எனப் பலரையும் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்ற ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட பல உடல்பரிசோதனைகள் நடந்ததில், எதிர்பாராதவிதமாக அவருக்கு ரத்தக் குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது.
இதனையடுத்து அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் முழுமையான குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.