சென்னை பெருங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
முனுசாமி சுப்பிரமணியன் (64) என்பவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் முனுசாமி சுப்பிரமணியன், 720 மதிப்பெண்ணுக்கு 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
முனுசாமி தன் ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி படிப்புகளை அரசு பள்ளியில் படித்துள்ளதால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வயதிலும் சாதிக்கலாம் அதற்கு தாம் உதாரணம் என்றும் தேர்வில் தோல்வி பெறும் மாணவர்கள் எந்தவித தவறான முடிவும் எடுக்கக் கூடாது எனவும் பெற்றோர்கள் மாணவர்களை கவனமாக கவனிக்க வேண்டும் என்றும் முனுசாமி அறிவுரை வழங்கினார்.
கட்டாயம் அரசு மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கும் என்றும், இளநிலை மருத்துவம் படிக்க தயாராக உள்ளேன் என்றும் முனுசாமி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.