காக்க காக்க 2 எனப்படும் ‘அன்புசெல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தொடர்பாக கெளதம் மேனன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளத்தில் கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடுவார்கள் எனவும் கூறப்பட்டது.
அதன்படி இயக்குநர் பா.இரஞ்சித் ‘அன்புசெல்வன்’ என்று பெயரிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘காக்க காக்க’ படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். அந்தப் பெயரில் படம் என்பதால், கெளதம் மேனனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கௌதம் துப்பாக்கியுடன் இருக்க, வினோத் குமார் படத்தை இயக்குவதாகவும் செவன்டி எம்எம் ஸ்டுடியோஸ் மகேஷ் படத்தை தயாரிப்பதாகவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வெளியான சில மணி நேரங்களில் கௌதம் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
‘அன்புசெல்வன்’ படம் தொடர்பாக கெளதம் மேனன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குநரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது”.
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.