கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம், காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தது. இந்நிலையில் கோவை கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளதே, அப்போது கொரோனா பரவாதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில்
கொரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கொடிசியா உள்அரங்கில் தி.மு.க நிகழ்ச்சி நடத்தியதாக அவர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது.25,000 பேர் கலந்துகொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ காணொளிகளையோ பார்க்கும் பச்சைக் குழந்தைக்குக் கூட இந்த நிகழ்ச்சி உள்அரங்கில் நடந்ததா? அல்லது மைதானத்தில் நடந்ததா? என்பது புரியும்.
அதில் குறைந்தபட்சம் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள்? ஓமிக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் குழுவும் தமிழகத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் தி.மு.க முகவர்களை ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் என்ன? தங்களது சொந்தக் கட்சியினருக்கும் அவர்கள் வழியாக பொதுமக்களுக்கும் நோய்ப் பரவலை ஏற்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்களே காரணமாக இருக்கலாமா?
ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பதைக் காட்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்த காவல்துறை தடைவிதித்த போது, சமூக பொறுப்புமிக்க ஓர் அரசியல் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதனையேற்று செயல்பட்டது.
ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு தி.மு.க.வினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கினார்களா? அப்படி காவல்துறை பாரபட்சத்துடன் அனுமதி கொடுத்திருந்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நலப் பிரச்னைகளுக்காக உரிய கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு நாங்கள் போராட்டம் நடத்தும் போது காவல்துறையினர் அனுமதி தர மறுத்தால் கோவை நிகழ்ச்சியை ஆதாரமாக காட்டி நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். என ஆவேசமாக அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.