இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி தெற்கு ரயில்வே புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், புறநகர் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டால் மட்டுமே பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயண அட்டை வழக்கப்படும் என்றும், ஏற்கனவே ரயில் பாஸ் பெற்றவர்கள் கொரோனா தடுப்புசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமல்படுத்தபடுவதாகவும், யு.டி.எஸ். செயலி மூலமாக புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு பெறும் வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.