தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக்கல்லூரி வீதம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி மாலை 4 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்துவைப்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி நேரில் பங்கேற்பது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடியின் வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் 20 நிமிடத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், அந்நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இச்சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில், தமிழகத்திற்கு நேரில் வரவிருந்த மோடி, காணொலி மூலம் கட்டிடங்களை திறத்துவைக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.