பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றும் ஏராளமான நபர்களை காண முடிகிறது. இந்நிலையில் பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மாஸ்க் அணிவதை கடுமையாக்கும் விதமாக இதற்கு முன்னதாக 200 ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 500 ரூபாயக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி பொது இடங்களில் யாராவது மாஸ்க் அணியாமல் சுற்றினால், பிடிபட்ட இடத்திலேயே அவர்களுக்கு 500ரூபாய் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.