புதுச்சேரியில் பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் என்பவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்துள்ளார்..
ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்த இவரின் பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது நித்தியானந்தா பெயரில் இவர் நடத்திவரும் பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு மாமியாரிடம் இருந்து வஜ்ரவேல் 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வஜ்ரவேல் வீடு திரும்பாத நிலையில் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்..
இதனிடையே அப்பகுதியின் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், காரில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த வஜ்ரவேலை மீட்டுள்ளனர்.
அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இருந்தது. இதனால் முகத்தை மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர், வஜ்ரவேலின் சடலத்தை மீட்டு உடர்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.