கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு , ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வந்தார். சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது. இதற்காக இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் லண்டன் புறப்பட்டுச்சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, வடிவேலு கோட், சூட்டில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, ஒட்டுமொத்த படக்குழுவும் கடந்த 23ம் தேதி சென்னை திரும்பினர். இதனையடுத்து வழக்கமான நடைமுறைகளின் படி வடிவேலு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடிவேலுக்கு கொரோனா தொற்று மற்றும் எஸ் ஜீன் டிராப் இருப்பது உறுதியானதை அடுத்து அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வரும் வடிவேலு நலமுடன் இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்ததாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி திரையுலகினரையும், வைகைப்புயல் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.