திருவனந்தபுரம்:-
மலையாள சினிமாவில் லாலேட்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் மோகன்லாலுக்கு இன்று வயது 60.
மலையாள சினிமாவில் இரு பெரும் ஸ்டார் நடிகர்கள் என்றால் அது மம்முட்டி மற்றும் மோகன்லால்.
மோகன்லாலின் இயற்பெயா மோகன்லால் விஸ்வநாதன் நாயர். 1960ம் ஆண்டு மே 21ந் தேதி கேரள மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் உள்ள இலந்தூர் கிராமத்தில் விஸ்வநாதன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் K.பாலாஜியின் மருமகன் ஆவார்.
தன் கிராமத்திற்கு அருகில் உள்ள முடவன்முகளிலுள்ள எல்.பி பள்ளியில் தன்னுடைய ஆரம்ப கல்வியை படித்த அவர், பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள மார்டன் பள்ளியில் உயர் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும்போதே நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், பள்ளியில் அவ்வப்போது நடைபெற்ற நாடகங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிறகு மகாத்மா காந்தி கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மலையாள நாடகங்களில் நடித்து வந்த மோகன்லால், தீவிர சினிமா வாய்ப்பு வேட்டையிலும் இறங்கினார். 1978 ஆம் ஆண்டு “திறநோட்டம்” என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் பொருளாதார பிரச்சினை காரணமாக சில தியேட்டர்களில் மட்டும் வெளியாகி மக்களின் கவனத்தை பெறாமல் போனது.
ஆனாலும் தளர்ந்து போகாமல் தொடர்ந்து போரடினார். அதன் பலனாக, கிடைத்ததுதான் 1980ல் வெளியான “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து மோகன்லாலுக்கு திரைப்பட வாசலை திறந்த விட்டது. தமிழில் வெளியான ஒரு தலைராகம் மாதிரி கேரளாவில் கொண்டாடப்பட்ட படம் இது. அதன்பிறகு மோகன்லாலுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.
1986ல் வெளிவந்த டி.பி பாலகோபாலன் M.A. என்ற படம் இவருக்கு “கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை” பெற்றுத் தந்தது.
1989ஆம் ஆண்டு வெளிவந்த “கிரீடம்”, 1991ம் ஆண்டு வெளிவந்த “பாரதம்”, 1999ம் ஆண்டு வெளிவந்த “வனப்பிரஸ்தம்” படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகருக்கான விருதிற்காக, மிகவும் அதிகமான தடவை பரிந்துரை செய்யப்பட்டவர் மோகன்லால்.
1997 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் “இருவர்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னரே ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்த கோபுரவாசலிலே படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி இருப்பார்.
அவரது நடிப்பும், தமிழ் உச்சரிப்புக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார். இருவர் படம் துவங்கி, சென்ற வருடம் வெளிவந்த காப்பான் படம் வரை, இதுவரை ஐந்து தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் “கம்பெனி” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.
2001ல் மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் விருது 9 முறை வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு “பத்ம பூஷன்”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்திய ராணுவம் மோகன்லாலை கவுரவிக்கும் வகையில் கௌரவ “லெப்டினென்ட் கர்னல்” பதவியை வழங்கியது.