கர்நாடகா நடிகர் ‘யாஷ்’ நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியை படைத்த படம் கே.ஜி.எஃப் சேப்டர் 1. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் சேப்டர் 2 என்ற பெயரில் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறது. மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீணா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது கே.ஜி.எப் சேப்டர் 2 படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு கே.ஜி.எப் சேப்டர் 2 படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். “அதில் ஒரு வழியாக அந்த நாள் வந்துவிட்டது கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பை கூடிய சீக்கிரம் நிறைவு செய்ய இருக்கிறோம், இந்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், எங்கள் அற்புதமான ரசிகர்களுக்கு டிசம்பர் 21 அன்று நாங்கள் வழக்கமாக பின்பற்றும் ஒரு விஷயம் இருக்கிறது, இந்த வருடமும் டிசம்பர் 21 காலை 10.8 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்களிடமிருந்து ஒரு விருந்து காத்திருக்கிறது” என்று அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து இருந்தது.
அதனைத் தொடர்ந்து கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் டீசர் பற்றிய தகவலை படக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.18 மணிக்கு டீசர் வெளியிடப்படும் என படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார்.