மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னரே படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படக்குழு படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இச்செய்தியை உறுதி செய்யும் விதமாக படக்குழு “பொன்னியின் செல்வன்” படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியும் ஜெயம் ரவியும் நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.