தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் ராணா டகுபதி. இவர், 2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். இவரது சித்தப்பா தான் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.
‘பாகுபலி’ திரைப்படத்தின் “பல்லால் தேவனாக” ராணா இன்னும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ‘காடன்’ படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ராணா நீண்ட நாட்களாக ஒரு நடிகையை யாருக்கும் தெரியாமல் காதலித்து வருவதாகவும், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் தனது காதலி குறித்த ரகசியத்தை நடிகர் ராணா தற்போது உடைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் ஜோடியாக உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ராணா ‘அவள் சம்மதித்து விட்டாள்’ என குறிப்பிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் இருப்பவர் ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவர்தான். அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி பல்லாள தேவன் கடைசியில் காதல்வயப்பட்டார் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காதல் குறித்த ராணாவின் இந்த அறிவிப்புக்கு தற்போது காஜல் அகர்வால், ஸ்ரேயா, பார்வதி நாயர், அணில் கபூர் உள்ளிட்ட திரையுலகினர் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் Congratulations Rana என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.