இந்திய படங்களுக்கு ஆஸ்கார் கிடைக்குமா? என நாம் ஏங்கித் தவித்த நேரத்தில்,சத்தமே இல்லாமல் இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து இந்தியாவுக்கும்,தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யோதா’ என்ற மலையாள திரைப்படம்.ஆனால் முதலில் ரிலீஸ் ஆகியது தமிழ் திரைப்படமான ‘ரோஜா’ தான்.இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.
ரகுமானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ‘ஜெய் ஹோ’ பாடல்,முதலில் சல்மான் கான் நடிப்பில் உருவான ’யுவ்ராஜ்’ திரைப்படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டது.இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான்.
அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.