சென்னை தி நகரில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி. ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விதிமீறல்கள் நடைபெறுகிறது என்று கூறி நான் முன்னதாகவே வெளிநடப்பு செய்துவிட்டேன். இப்போது இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விதி மீறல்கள் இருப்பதால் தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர்கள் பதவி வகிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது உயர் நீதிமன்றத்தின் உன்னதமான தீர்ப்பு எனவும் ,முரளி அணியில் போட்டியிட்ட ராதா கிருஷ்ணன் போன்றோர் விதிமீறல்கள் செய்தே தேர்தலில் வெற்றி அடைந்துள்ளனர். இதுவரை வாக்காளர் பட்டியல் தரப்படவில்லை, வாக்குப்பதிவு நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்படவில்லை. பதிவான 318 வாக்குகளில் 200 மேற்பட்ட வாக்குகள் போலியானவை. உண்மையை ஏற்றுக்கொண்டு அனைவரும் தங்களது பதவிகளை தார்மீக ரீதியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
சங்கம் எப்போதும் போல இயல்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறோம். முன்னர் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எல்லாம் அரசியல் தலையீடு கண்டிப்பாக இருந்தது. அவர்கள் யார் என்று சொல்ல விரும்பவில்லை. நாங்கள் டிவியில் வாக்கு கேட்போம் டிவி கொடுத்து வைத்திருக்க மாட்டோம் ,போன் செய்து வாக்கு கேட்போம் போன் கொடுத்து வாங்கி வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.