கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
தமிழகத்தில் பல, மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதனையடுத்து இதனை சமாளிப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா நிதி கொடுத்து உதவ அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதனையடுத்து நடிகர் அஜித் வாங்கி பரிவர்த்தனை மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் அஜித். இதை ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே. செல்வமணி உறுதிபடுத்தியுள்ளார்.