மாதவிடாய்க் காலத்தில் கோவில் மற்றும் சமையலறைக்கு சென்றதாக 68 மாணவிகளின் அடைகளை களைந்து சோதனை செய்ததாக கல்லூரி நிர்வாகம் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் இன்ஸ்ட்டிடியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் சுமார் 1500 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரி விடுதியில் மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், இக்கல்லூரி விடுதியில் நடந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலர் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக கல்லூரி முதல்வருக்கு விடுதி நிர்வாகம் வழியாக புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது. இந்த 68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலத்தில் இருக்கின்றனர், என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதை அடுத்து 2 மாணவிகள் தாங்களாக ஒதுங்கி உள்ளனர். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை களைய செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா? இல்லையா? என்று சோதனை நடத்தி உள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. ஆனால் போலீஸில் புகார் ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ‘கிரந்திகுரு ஷியாம்ஜி கிரிஷ்ண வர்மா கட்ச்’ பல்கலைகழக துணைவேந்தர் D.C. டோலாக்கியா விசாரணை குழு ஒன்றை அமைத்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என டோலாக்கியா கூறி உள்ளார்.