திருச்சூரில் தன்னுடைய கால்பந்து திருடுபோனதாக காவல் நிலையத்திற்கு போன் மூலம் சிறுவன் ஒருவன் புகாரளித்துள்ளான்.
திருச்சூரை சேர்ந்த அதுல் என்ற 10 வயது சிறுவன், பையனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்துள்ளான். அப்போது தன்னுடைய கால்பந்து காணாமல் போனதாகவும், கண்டுபிடித்து தருமாறும் கூறியுள்ளான்.
மேலும் தன்னுடைய பெற்றோர் புதிய பந்து வாங்கி தருவதாக கூறியும், தனக்கு காணாமல் போன பந்து தான் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளான். அதனால் தான் காவல் நிலையத்திற்கு போன் செய்ததாகவும் கூறியுள்ளான்.
இதனையடுத்து பையனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிறுவனின் காணாமல் போன பந்தை தேடிய போது, அதே ஊரில் கால்பந்து விளையாடும் சிலர் பந்தை எடுத்தது தெரியவந்தது. உடனே அவர்களை பிடித்த காவல் துறையினர் பந்தை மீட்டனர்.
பின்னர் சிறுவனை வரவழைத்து பந்தை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். இதனிடையே சிறுவனின் புகாரை புறந்தள்ளாமல் நடவடிக்கை எடுத்த காவல் துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.