நொய்டா:-
நொய்டாவை சேர்ந்த 12 வயது சிறுமி தனது பகுதியில் உள்ள 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிவைக்க, தான் சேமித்து வைத்திருந்த 48,000 ரூபாயை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல மத்திய அரசு சார்பில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பல தொழிலாளர்கள் சாலை மார்கமாக நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிறுமி நிஹாரிகா திவேதி, 12 வயதாகும் இவர் 8 வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில தினங்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதை கண்ட இந்த சிறுமி தான் வசிக்கும் பகுதியில் யாராவது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகிறார்களா என நண்பர்கள் மூலம் விசாரித்து வந்துள்ளார்.
அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்ததை சிறுமி நிஹாரிகா திவேதி அறிந்தார். அதில் ஒருவருக்கு புற்று நோய் இருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த தொழிலாளர்களை விமானத்தில் ஜார்கண்ட் அனுப்பிவைக்க, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 48,000 ரூபாயை கொடுத்து உதவியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அந்த சிறுமியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்:-
மற்றவர்களின் தேவையை உணர்ந்து உதவியதற்கு அந்த சிறுமியை பாராட்டுவதாகவும் அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிறுமி நிஹாரிகா:-
சமூகம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அதை திருப்பித் தருவது எங்கள் கடமை என தெரிவித்துள்ளார்.