காமா ரெட்டி:-
தெலுங்கானா மாநிலம் ராமா ரெட்டி மாவட்டத்தில் பசிக்கொடுமையால் இறந்த ஒருவரின் உடலை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச்செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக முழு அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் பசி கொடுமை காரணமாக ஆங்காங்கே உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் ஹமாலி ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மஹாலிங்க ராஜு. ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் தெருவோரங்களில் தங்கியிருந்த ராஜு அக்கம் பக்கத்தில் வசிப்போர் தந்த உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பசி மற்றும் உடல் கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தனியார் வாகனங்கள் எதுவும் முன்வரவில்லை.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் சிலரின் உதவியை பொலீஸார் நாடியுள்ளனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர் ஒருவர் இறந்த மகாலிங்க ராஜூவின் உடலை துணியில் சுற்றி சைக்கிளில் வைத்து கொண்டு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே கூலித்தொழிலாளி எச்ஐவி தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலா வருகிறது. இந்த சம்பவம் குறித்து காமா ரெட்டி மாவட்ட ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறார்.