நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினரின் தகவல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஹீரோர் சோனுசோட் வீட்டில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் விடிய விடிய ரெய்டு நடத்தினர். ஊரார் அறிந்த சோனு சூடுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சோனு சூடின் உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும், அவர் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வில்லன் வேடத்தில் நடித்த சோனு சூட், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது செய்த பல்வேறு உதவிகளால் பொதுமக்கள் மத்தியில் இன்று வரை ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
விவசாயிக்கு டிராக்டர், வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டத்துக்கு தூதுவராக, சமீபத்தில் சோனு சூட்டை டெல்லி மாநில அரசு நியமித்தது.
இதனை தொடர்ந்து சோனு சூட்டுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை சோனு சூட் மீறியதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது பெரிய அளவிலான வெளிநாட்டு நிதிகளை பெற்று, அதனை வேறு வழிகளில் செலவிடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, மற்றொரு இடத்தில் நடிகர் சோனு சூட் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்ததாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். போலி கடன் ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ள வருமான வரித்துறையினர், சோனு சூட்டின் தொண்டு நிறுவன கணக்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சோனு சூட் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து, கருத்து தெரிவித்துள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சோனு சூட் உடன் லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை இருப்பதாக கூறியுள்ளார்.
அண்மையில் கூட தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்தார். இப்படி சேவைக்கு பெயர்போன சோனு சூட் வரி செலுத்தவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.