புதுக்கோட்டை:-
சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கியதில் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததால், காரில் சென்ற மருத்துவர் சத்தியா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை பகுதிகளில் கடும் மழை பெய்த நிலையில் பொம்மாடி மலை – துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. சுமார் 20 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது.
இந்நிலையில், இது தெரியாமல் சிவக்குமார் என்பவரது மனைவியும் ஒசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவருமான சத்தியா தனது மாமியாருடன் காரில் சென்றுள்ளார். தேங்கிய தண்ணீரில் சுரங்கப் பாதையில் கார் நின்று விட, காருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
அப்போது காரின் சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால், காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது மாமியார் மட்டும் கார் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளார். ஆனால் சத்தியா சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதனைக் கழட்டிக் கொண்டு உடனே வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சத்யாவின் சடலத்தை காரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தங்கள் கிராமத்திற்கு செல்லும் தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றி தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுடைய கருத்தை கேட்காமலேயே இந்த சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர்.
அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி துடையூர், வெள்ளனூர், பொம்மாடிமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் புதுக்கோட்டை – திருச்சி சாலையில் பொம்மாடிமலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.