உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் பாஜகவின் தடுப்பூசியை நம்பமுடியாது என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோன தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம் இன்று நடைப்பெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம் நடை பெறுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் “நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜகவின் தடுப்பூசியை நம்பமுடியாது எனத் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் இப்போது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளமாட்டேன். பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது? எங்கள் அரசு அமையும்போது அனைவரும் இலவச தடுப்பூசியைப் பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியாது” என்றார்.