பரேலி:-
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர்கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தடல் புடலாக நடந்து முடிந்தது. மறுநாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.
இந்நிலையில், மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.
இதை கண்ட மணமகள் உடனடியாக கழுத்திலிருந்த மாலையை உதறி விட்டு மணமேடையிலிருந்து எழுந்தார். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இது போன்ற ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது தன் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித் தான் அடிப்பார். பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.
இதனிடையே மணமகன் ஒரு ராணுவ வீரர் என்று அந்த சமயத்தில் குடிபோதை போதையில் இருந்ததாகவும், அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது.
உறவினர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் அதை ஏற்கவில்லை. தங்கள் வீட்டுக்கு பெண் வீட்டார் திரும்பிவிட்டார். இதனால் மணமகன் குடும்பத்தினர் செய்வதறியாது திருமணமண்டபத்தில் நின்றனர்.